தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பசியைப் போக்கி, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கியத் திட்டங்களில் ஒன்று காலை உணவுத் திட்டம். தொடக்கத்தில் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இச்சிற்றுண்டி திட்டம், தற்போது 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. மேலும், இத்திட்டம் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் விரிவாக்கத்திற்கு கூடுதல் நிதி தேவைப்படும் சூழலில், இதற்கான நிதி ஒதுக்கீடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு வளர்ச்சி நிதியில் இருந்தும் பெறப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் சமமான சத்துணவு வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு, மாநிலச் செலவினங்கள் மற்றும் குறிப்பிட்ட உதவித் தொகைகள் அடங்கிய பொதுப் பிரிவின் கீழ் ரூபாய் 134 கோடியே 45 லட்சத்து 24 ஆயிரத்து 458 ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்தவும், அவர்களுக்குச் சீரான உணவு கிடைப்பதை உறுதி செய்யவும் இச்சிறப்பு நிதிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்படி, ஆதிதிராவிடர் முன்னேற்றத்திற்கான சிறப்புச் செயல் திட்டத்தின் கீழ் சுமார் ரூபாய் 63 கோடியே 15 லட்சத்து 19 ஆயிரத்து 64-ம், மலைக்கிராமங்கள் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயிலும் பள்ளிகளுக்காகப் பழங்குடியினர் பகுதித் துணைத் திட்டத்தின் கீழ் சுமார் ரூபாய் 6 கோடியே 11 லட்சத்து 14 ஆயிரத்து 748-ம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்து, இடைநிற்றலை வெகுவாகக் குறைத்துள்ள இக்காலை உணவுத் திட்டம், தற்போது அடுத்தகட்ட விரிவாக்கத்தை நோக்கி நகர்கிறது. இருப்பினும், இத்திட்டத்திற்கான கூடுதல் செலவினங்களை ஈடுகட்ட எஸ்சி, எஸ்டி சிறப்பு வளர்ச்சி நிதியைப் பயன்படுத்துவது தொடர்பாக அரசியல் தளங்களில் பல்வேறு விவாதங்களும் எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன.
