இந்தியாவில் தனியார் பள்ளிக் கட்டணங்கள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்து வருவது குறித்த விவாதத்தை இந்தச் செய்தி கிளப்பியுள்ளது. சமூக வலைதளமான ‘X’-இல் சாட்சி என்பவர் ஒரு பள்ளிக் கட்டண ரசீதைப் பகிர்ந்துள்ளார். அதில், சீனியர் கே.ஜி (Senior KG) படிக்கும் ஒரு குழந்தைக்கு ஆண்டு கட்டணமாக ₹2.25 லட்சம் குறிப்பிடப்பட்டுள்ளது. “வெறும் ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் பாடலைக் கற்றுக்கொடுக்க இவ்வளவு கட்டணமா?” என்று அவர் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.
இந்த ₹2.25 லட்சம் என்பது ஆரம்பக் கட்டணம் மட்டுமே. இதில் பள்ளி சீருடை, உணவு (Cafeteria) மற்றும் போக்குவரத்து (Transportation) செலவுகள் சேர்க்கப்படவில்லை. அவற்றையும் சேர்த்தால் ஒரு வருடத்திற்கு ஒரு குழந்தையைப் படிக்க வைக்க மிகப் பெரிய தொகை தேவைப்படும். மேலும், ஒருமுறை கட்டிய பணத்தைத் திரும்பப் பெற முடியாது (Non-refundable) என்ற நிபந்தனையும் அந்த ரசீதில் உள்ளது. இந்த விவகாரம் இணையதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
“நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு இது எட்டாக்கனி. அரசு கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்க வேண்டும்” எனச் சிலர் கொதித்துள்ளனர். “படிக்க வைக்கிறார்களா அல்லது செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புகிறார்களா?” என ஒரு பயனர் கேலி செய்துள்ளார். இன்னும் சிலர், “ஆடம்பரத்திற்காக இது போன்ற பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கும் பெற்றோர்களிடமும் தவறு உள்ளது” என்று கருத்து தெரிவித்துள்ளனர். கல்வி என்பது வணிகமாகிவிட்டதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
