தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக பல்வேறு சிக்கல்களை தொடர்ந்து சந்தித்து வருகிறது. பாஜகவுடன் இ பி எஸ் கூட்டணி வைத்திருப்பதால் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர்.
அதன் வெளிப்பாடாக சமீபத்தில் செங்கோட்டையன் பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க இபிஎஸ்-க்கு கெடு விதித்திருந்தார். ஆனால் அதற்கு அடுத்த நாளே செங்கோட்டையனை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். இதனால் அதிமுகவில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. அதேசமயம் செங்கோட்டையனின் அடுத்த நகர்வு என்ன என்பது கவனிக்கத்தக்க ஒன்றாக உள்ளது. சமீபத்தில் அமித்ஷாவை அவர் டெல்லியில் சந்தித்து பேசியதாக கூறி இருந்தார். இபிஎஸ்ஸுக்கு எதிராக போர் கொடி தூக்கி உள்ள செங்கோட்டையன், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.
இந்நிலையில் இபிஎஸ் பொதுச்செயலாளராக இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக உடைந்து கிடப்பதாக உதயநிதி கூறும் கருத்துக்கள் சரிதான் என கூறிய தினகரன், தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து தோல்வியடைய இபிஎஸ் தான் காரணம் என கூறியுள்ளார். மேலும் செங்கோட்டையன் முயற்சிக்கு தான் முழு ஆதரவாக இருப்பேன் எனவும் மதுரையில் பேட்டி அளித்துள்ளார். டிடிவி தினகரனின் இந்த பேச்சு புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
