விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அம்மாக்குளம் கிராமத்தில், நல்லாசிரியர் விருது பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் இளங்கோவன் (50) என்பவர் அவரது வீட்டிற்குள்ளேயே மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேல் ஓலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த இவருக்கு, கடந்த ஆண்டு இவரது கல்விச் சேவையைப் பாராட்டி ‘நல்லாசிரியர் விருது’ வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மனைவியைப் பிரிந்து தனது தாயாருடன் வசித்து வந்த இளங்கோவன், ஆசிரியர் பணியுடன் சேர்த்து சுயதொழிலாக பழைய இரும்பு வியாபாரமும், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த மூன்று நாட்களாக ஆசிரியர் இளங்கோவன் யாரிடமும் பேசாத நிலையில், சந்தேகமடைந்த அவரது அக்கா மகன் அம்மாக்குளத்தில் உள்ள வீட்டிற்கு நேரில் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டிற்குள் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியதை அடுத்து, உறவினர்கள் உதவியுடன் உள்ளே சென்று பார்த்தபோது இளங்கோவன் உடல் உருமாறி, அழுகிய நிலையில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு உறைந்து போயினர். இதுகுறித்துத் தகவல் அறிந்ததும் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP) சாய் பிரனீத், செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) ரமேஷ் ராஜ் மற்றும் வளத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட ஆய்வில், ஆசிரியர் இறந்து கிடந்த இடத்தைச் சுற்றிலும், வீட்டின் உள்ளேயும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மோப்ப நாய் மற்றும் போலீசார் தடயம் கண்டுபிடிப்பதைத் திசை திருப்புவதற்காகவே கொலையாளிகள் திட்டமிட்டு மிளகாய் பொடியைத் தூவியிருக்கலாம் என்று போலீசார் பலமாகச் சந்தேகிக்கின்றனர். தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டில் இருந்த முக்கிய தடயங்களைச் சேகரித்த நிலையில், அழுகிய நிலையில் இருந்த இளங்கோவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கொலை செய்யப்பட்ட ஆசிரியர் இளங்கோவனுக்குப் பணப் பரிவர்த்தனை தொடர்பாக யாருடனாவது முன்விரோதம் இருந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நெகனூர் ஏரிக்கரை அருகே மர்ம நபர்கள் சிலர் இவரைக் கொலை செய்ய முயன்ற சம்பவமும் ஏற்கனவே நடந்துள்ளது; அப்போது தப்பிய இளங்கோவன், தற்போது வீட்டில் தனியாக இருந்தபோது கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வளத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொடூரச் சம்பவம் செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன் (38). இவருக்கும் சித்ரா (30) என்ற பெண்ணுக்கும் கடந்த…
11 வயதான ஜேசி லீ டுகார்ட் தனது வீட்டிலிருந்து பேருந்து நிறுத்தத்தை நோக்கிச் சென்றபோது, பிலிப் காரிடோ மற்றும் அவரது…
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய வரலாறு படைத்து, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள…
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகையை ₹1,000-லிருந்து ₹2,500 ஆக கணிசமாக உயர்த்துவதற்கான கோப்பிற்கு துணை…
பீகார் மாநிலம், ரோஹிவா கிராமத்தைச் சேர்ந்த ஜாக்லல் மஹாதோவ் என்பவரது இளைய மகள் மம்தா குமாரி. இவருக்கு நான்கு மூத்த…
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை பழங்காநத்தம் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…