அசுரன் படத்தில் தனுஷ் கிளைமேக்ஸில் ஒரு வசனம் பேசுவார். நம்மகிட்ட காசு இருந்தா புடுங்கிடுவாங்க.. சொத்து இருந்தா புடுங்கிடுவாங்க.. ஆனா நம்ம கிட்ட இருக்கிற கல்வியை மட்டும் யாராலும் எடுத்துக்க முடியாது. நல்லா படிக்கனும் என்று கூறுவார். அதை நிரூபிக்கும் வகையில் இன்று தனது அயராத உழைப்பால் ஒரு சமுதாயத்தின் பார்வையையே மாற்றி அமைத்த பெருமைக்குச் சொந்தக்காராக விளங்கியிருக்கிறார் ஸ்ரீபதி.
இன்று தமிழ்நாடே இவரைப் பற்றித் தான் பேசிக்கொண்டிக்கிறது. வெறும் 23 வயதே ஆன ஸ்ரீபதி இன்று சமுதாயத்தில் மிக உயர்ந்த பதவியான நீதிபதி பதவியை அலங்கரித்திருக்கிறார். தேர்வில் வெற்றிபெற்று பணிக்குச் செல்வது அனைவருக்கும் செய்யும் ஒன்றுதான் என்றாலும் ஸ்ரீபதி சாதித்தது சற்று வித்தியாசமானது. ஏனெனில் அவரது பின்னனி.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஸ்ரீபதி, திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். பள்ளிக் காலங்களில் வறுமையில் போராடி கல்வி பயின்று சமுதாயத்திற்கு தன்னால் மாற்றம் கொண்டுவர வேண்டுமென பி.ஏ.பி.எல் சட்டப்படிப்பை முடித்தார். சட்டப்படிப்பை படிக்கும் போதே ஸ்ரீபதிக்கு திருமணமானது.
இந்தச் சூழலில் டிஎன்பிஎஸ்சி மூலம் சிவில் நீதிபதிக்கான தேர்வு அறிவிக்கப்படுகையில் அதற்கு விண்ணப்பித்து கடுமையாகப் படித்து தயாராகி வந்திருக்கிறார். இந்நிலையில் தேர்வு நேரமும் நெருங்க அப்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாகவும் இருந்துள்ளார். ஆனால் விதியின் விளையாட்டால் தேர்வுக்கு இரு தினங்களுக்கு முன்னர்தான் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.
ரூ.20-க்கு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலை மிஞ்சும் தரமான உணவு… கோவையின் பசி தீர்க்கும் சாந்தி கேண்டீன் பின்னனி
தனது நீதிபதிக் கனவை எப்படியாவது நிறைவேற்றும் பொருட்டு பச்சைக் குழந்தையைக் கையில் ஏந்திக் கொண்டு தேர்வினை எழுதியுள்ளார். இவ்வாறு அவரின் கடின உழைப்பிற்கு கைமேல் பலன் கிடைத்தது. சமீபத்தில் சிவில் நீதிபதி தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வில் ஸ்ரீபதி வெற்றி பெற்றிருந்தார். இதன் மூலம் பழங்குடி இனத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டின் முதல் பெண் சிவில் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார் ஸ்ரீபதி. இத்தனைக்கும் அவரின் வயது எத்தனை தெரியுமா 23 தான்.

#image_title
இவரின் இந்தச் சாதனையை இப்போது தமிழகமே கொண்டாடி வருகிறது. பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் ஒரு பெண் சாதித்தது போல மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இவரின் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி இரண்டும் தற்போது தேர்வுக்கு தயாராகிவரும் அனைவருக்கும் ஓர் உற்சாக டானிக் குடித்ததைப் போல இருக்கிறது.
நீதிபதிக் கனவை நிறைவேற்றிய ஸ்ரீபதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு தலைவர்களும், பொதுமக்களும் தொடர்ந்து வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். நாமும் நமது வாழ்த்துக்களைக் கூறிக் கொள்வோம்.