சீர்காழி அருகே பள்ளிக்குச் செல்லும் தனது அக்காக்களை வழிஅனுப்ப தாயுடன் வந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை மகிழ்வேலன், பள்ளி வேனின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். புத்தூர் ஆனந்தகூத்தன் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி – அரசி தம்பதியரின் பெண் குழந்தைகளை வேனில் ஏற்றிவிடும் அவசரத்தில், தாய் குழந்தையைக் கீழே இறக்கியுள்ளார். அந்த சில நொடிகளில் குழந்தை வேனின் பின்பகுதிக்குச் சென்றதை கவனிக்காத ஓட்டுநர் பிரகாஷ், வாகனத்தை அலட்சியமாக முன்னோக்கி இயக்கியதால் இந்த நெஞ்சை உலுக்கும் கோர விபத்து நிகழ்ந்தது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கொள்ளிடம் காவல் துறையினர், குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதோடு, வேன் ஓட்டுநர் பிரகாஷைக் கைது செய்து வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இருப்பினும், பள்ளி வாகனத்தில் தகுந்த உதவியாளர் இல்லாமல் அலட்சியமாக இயக்கிய பள்ளி தாளாளரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, குழந்தையின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி மற்றும் இழப்பீடு கோரியும், பள்ளி வாகனங்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும் பொதுமக்கள் சீர்காழி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது, தாளாளரைக் கைது செய்யும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என பொதுமக்கள் உறுதியாகக் கூறியதால் இருதரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதமும் பதற்றமும் நிலவியது.
