உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள சிஹோரி சுங்கச்சாவடி அருகே ஜூன் 26 அன்று அதிகாலை நிகழ்ந்த லாரிக் கசிவு விபத்தில், எல்.பி.ஜிஎரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி ஓட்டுநர் மற்றும் மூன்று சுங்கச்சாவடி ஊழியர்கள் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கான்பூரிலிருந்து வாரணாசி நோக்கி அதிவேகமாகச் சென்ற அந்த டேங்கர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பானில் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் லாரியிலிருந்து எரிவாயு கசிந்து, நொடிப் பொழுதில் அது பெரும் தீப்பிழம்பாக மாறி சுற்றியிருந்த பகுதி முழுவதையும் சூழ்ந்துகொண்டது. இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளன. விபத்தில் லாரியின் கேபினுக்குள் மாட்டிக்கொண்ட ஓட்டுநர் தர்மேந்திர திவேதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
https://twitter.com/Chhotukingoffi1/status/2072744290405818695/video/1
இவ்விபத்தின் போது சுங்கச்சாவடியில் பணியிலிருந்த ஊழியர்கள் ஐந்து பேருக்குக் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் சிகிச்சைக்காக பிரயாக்ராஜில் உள்ள ஸ்வரூப் ராணி நேரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் அலோக் சிங், ஹிராமணி சிங் மற்றும் கிருஷ்ணபால் மௌரியா ஆகிய மூவர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்தது. தற்போது படுகாயமடைந்த மேலும் இரண்டு ஊழியர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து கோக்ராஜ் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து, உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், விபத்திற்கான துல்லியமான காரணம் மற்றும் சூழ்நிலைகளைக் கண்டறிய சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
