பொதுவாகக் கோடை காலத்தை விட குளிர்காலத்தில் தான் சருமம் மிக அதிகமாகப் பாதிக்கப்படுகிறது என்று தோல் மற்றும் அழகியல் மருத்துவர் டாக்டர் சுனில்குமார் பிரபு விளக்கியுள்ளார். வெப்பநிலை குறையும்போது, நம் உடல் ஈரப்பதத்தை இழப்பதால், சருமம் அதிக வறட்சிக்கு உள்ளாகி அரிப்பு ஏற்படுகிறது.
குளிர்காலத்தில் அணியும் ஸ்வெட்டர் அல்லது கம்பளிப் போர்வைகள், சருமத்துடன் உரசும்போது வெப்பத்தை உருவாக்கி, அது வறட்சியை மேலும் அதிகப்படுத்தி, சிலருக்கு எரிச்சல், தடிப்புகள் அல்லது ஒவ்வாமைகளை ஏற்படுத்தும்.
எனவே, இந்த நேரத்தில் சருமத்தைப் பராமரிக்க, நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். வழக்கத்தை விட ஒரு லிட்டர் அதிகமாகத் தண்ணீர் குடிப்பதுடன், சருமத்தின் வெளிப்புறத்தில் அதிக மாய்ஸ்ச்சரைஸரைப் பயன்படுத்த வேண்டும். ஷியா பட்டர், செரமைடு, கிளிசரின் போன்ற உட்பொருட்கள் கொண்ட அடர்த்தியான மாய்ஸ்ச்சரைஸர்களை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை தடவுவது அவசியம்.
மேலும், குளிருக்கு இதமாக இருந்தாலும், அதிக சூடான நீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது சருமத்தை மிக அதிகமாக வறட்சியடையச் செய்து, கரடுமுரடாகவும், செதில் செதிலாகவும் உதிரச் செய்யும். அதிக பிஎச் கொண்ட சோப்புகளைத் தவிர்த்து, மென்மையான பாடிவாஷ் பயன்படுத்துவதும், குளிர்காலமாக இருந்தாலும் சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவதும் சரும ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம்.
