தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கட்சியிடம் தோல்வியடைந்து ஆட்சியைப் பறிகொடுத்த திமுக, மீண்டும் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. தோல்விக்கான உண்மையான காரணங்களை ஆராயும் நோக்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் தொண்டர்களிடம் நேரடியாகக் கருத்துக்களைக் கேட்டுள்ளார். மேலும், இது குறித்து விரிவாகக் கண்டறிய மாவட்ட வாரியாகத் தனிக்குழுக்களையும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.
மக்களின் அபிப்பிராயங்களை அறிய மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு ‘இயேசு விடுவிக்கிறார்’ ஊழியத்தின் மோகன் சி. லாசரஸ் தனது வாழ்த்துகளையும் வரவேற்பையும் தெரிவித்துள்ளார். தான் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராத பொதுமக்களின் பிரதிநிதியாக, திமுகவின் இந்தத் தோல்விக்குக் காரணமாகத் தன் மனதில் பட்ட இரண்டு முக்கியக் காரியங்களை மு.க.ஸ்டாலின் சரிசெய்யத் தவறிவிட்டதாக அவர் வேதனை பகிர்ந்துள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ள முதல் காரணம், தமிழகத்தில் பெருகி வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் ஆகும். மதுப் பழக்கத்தால் மாநிலத்தில் குற்றங்கள், விபத்துகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாகவும், ஏராளமான குடும்பங்கள் உடைந்து, பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கை சீரழிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொரோனா காலத்தில் கடைகள் மூடப்பட்டபோது பலர் இப்பழக்கத்திலிருந்து மீண்டதைச் சுட்டிக்காட்டிய அவர், மதுக்கடைகளை மூடினால் பாதிக்கும் மேற்பட்டவர்களைக் காப்பாற்ற முடியும் என்ற மக்களின் வேதனையை ஸ்டாலினின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.
இரண்டாவதாக, அரசு அலுவலகங்களில் மலிந்து கிடக்கும் லஞ்ச ஊழலே அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் மிகப்பெரிய பாதிப்பிற்குக் காரணம் என்று அவர் சாடியுள்ளார். தற்போதைய சூழலில் 90 சதவீத அதிகாரிகள் நேர்மையான காரியங்களுக்குக் கூட லஞ்சம் கேட்பதாகவும், இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் இருப்பதாகக் கூறி மக்கள் முதலமைச்சர் வரை கைகாட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவற்றை அரசு கட்டுப்படுத்தத் தவறியதே இந்த அரசியல் மாற்றத்திற்கும் தேர்தல் தோல்விக்கும் மிக முக்கியக் காரணம் என்று அவர் பொதுமக்களின் அபிப்பிராயமாகத் தெரிவித்துள்ளார்
