மனிதாபிமானம் செத்துப்போச்சா?.. நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லாரி.. உயிருக்கு போராடும் மனிதர்கள்.. ஓடி வந்த மக்கள்.. உதவிக்கு வரல… ஆனா திருட வந்துட்டாங்க.. நெட்டிசன்களை ஆத்திரமூட்டிய வைரல் வீடியோ..!!!

By Muthu Mani on வைகாசி 24, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள அந்தவா சந்திப்பு அருகே, ஞாயிற்றுக்கிழமை மதியம் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கான்பூரிலிருந்து பிரயாக்ராஜ் நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த லாரி விபத்தில் சிக்கியதில், அதில் பயணித்த நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். மேலும், லாரியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன; பல ஆடுகள் காயமடைந்து சாலை முழுவதும் சிதறி ஓடின.

இந்த விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே அந்த இடத்தில் பெரும் மனிதாபிமானமற்ற அவலம் அரங்கேறியது. விபத்தில் காயமடைந்து உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த மனிதர்களுக்கு முதலுதவி செய்யவோ அல்லது அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கவோ அங்கிருந்த வழிப்போக்கர்கள் முன்வரவில்லை. அதற்கு மாறாக, சாலையில் சிதறிக் கிடந்த மற்றும் லாரியில் சிக்கியிருந்த ஆடுகளைத் திருடிச் செல்வதில் அவர்கள் குறியாக இருந்தனர். காயமடைந்தவர்கள் உதவிக்காகக் காத்துக் கிடக்க, மக்கள் ஆடுகளைத் தூக்கிக்கொண்டு ஓடும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கோக்ராஜ் மற்றும் ஷாஜாத்பூர் போலீசார், காயமடைந்த நான்கு பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், கிரேன் மூலம் லாரி அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டதுடன், எஞ்சிய விலங்குகளும் மீட்கப்பட்டன. இதுகுறித்து பேசிய காவல் அதிகாரி சந்திரபூஷன் மௌரியா, விபத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆடுகளைக் கொள்ளையடித்த நபர்களை அடையாளம் காண வைரல் வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.