50 அடி ஆழக் கிணற்றில் வீசப்பட்ட 3 வயது குழந்தை… 27 வயது தாய் எடுத்த கொடூர முடிவு… மதுரையில் நடந்த நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்…!

By Nanthini on வைகாசி 24, 2026

Spread the love

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா (27). இவருக்கும் விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான காளியப்பன் என்பவருக்கும் திருமணமாகி 10 வயதில் ஒரு மகனும், 3 வயதில் சஞ்சிதா என்ற மகளும் இருந்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தம்பதியரிடையே ஏற்பட்ட கடுமையான குடும்பத் தகராறு காரணமாக, கவிதா தனது கணவருடன் கோபித்துக் கொண்டு இரு குழந்தைகளுடன் சிவரக்கோட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் அவரது கணவர் காளியப்பனும் வெளியூருக்குச் சென்றுவிட்டார்.

தாய் வீட்டிற்கு வந்த பிறகும், தன்னைத் தேடி கணவர் வராததாலும், தங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீடித்ததாலும் கவிதா கடந்த சில நாட்களாக மிகுந்த மன வேதனையிலும் விரக்தியிலும் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 23-ஆம் தேதி மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட கவிதா, தனது 3 வயது பெண் குழந்தை சஞ்சிதாவை வீட்டின் அருகே இருந்த 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தூக்கி வீசி கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர் பதற்றத்துடன் வீட்டிற்குள் ஓடிவந்து, கதவைத் தாழிட்டுத் தூக்கிட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டார். கவிதாவின் மூத்த மகன் தனது தாத்தாவுடன் பஜாருக்குச் சென்றிருந்ததால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

   

வெகு நேரமாக வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது கவிதா தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கள்ளிக்குடி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கவிதாவின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியபோது 3 வயது பெண் குழந்தை காணாமல் போனது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடிப் பார்த்தனர். எங்கும் குழந்தை கிடைக்காததால், அருகில் இருந்த கிணற்றுக்குள் இறங்கித் தேடியபோது, குழந்தை சஞ்சிதா சடலமாக மீட்கப்பட்டாள்.

   

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகக் கள்ளிக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த கவிதா மற்றும் அவரது மகள் சஞ்சிதாவின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குடும்பத் தகராறு மற்றும் மன உளைச்சல் காரணமாக, பெற்ற மகளையே கிணற்றில் வீசிக்கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட இந்த விபரீதச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.