கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே குடும்பத் தகராறில் இளம்பெண் ஒருவரை அவரது சித்தப்பாவே வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த அந்தப் பெண், வேறொரு நபருடன் கள்ளக்காதலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அவரது சித்தப்பா கண்டித்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பெண் தனது சித்தப்பாவை கீழே தள்ளிவிட்டதாகத் தெரிகிறது. கீழே விழுந்த ஆத்திரத்தில் அந்த மாற்றுத்திறனாளி முதியவர் அரிவாளால் வெட்டியதில் அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த இரணியல் போலீசார், உயிரிழந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த சித்தப்பாவை அதிரடியாகக் கைது செய்தனர். குடும்ப உறுப்பினர்களுக்குள்ளேயே நடந்த இந்த விபரீதக் கொலைச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
