தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் போர்கான் கிராமத்தில், ரூ.2 கோடி காப்பீட்டுப் பணத்திற்காகத் தனது கணவரையே மனைவியே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தனியார் நிறுவன ஊழியரான ரமேஷ் (35) என்பவருக்கு, அவரது மனைவி சவுமியா (30) தூக்க மாத்திரை கலந்த தண்ணீரைக் கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளார். பின்னர், தனது கள்ளக்காதலன் திலீப் (28) மற்றும் ஒரு ரவுடி கும்பலை வரவழைத்து, ரமேஷின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
கொலைக்குப் பிறகு, தனது கணவர் மாரடைப்பால் இயற்கையாக உயிரிழந்ததாகக் கூறி சவுமியா நாடகமாடியுள்ளார். இருப்பினும், ரமேஷின் மரணத்தில் சந்தேகமடைந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. காப்பீட்டுப் பணத்தைப் பெறுவதற்காகத் திட்டமிட்டு இந்தக் கொலையைச் செய்த சவுமியா, அவரது கள்ளக்காதலன் திலீப் உள்ளிட்ட 6 பேரையும் காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.
