சென்னை அயனாவரத்தில் தனியாக வசித்து வந்த 75 வயது மூதாட்டி ஒருவரிடம், அதே வீட்டில் வாடகைக்கு இருந்த பெண்ணும் அவரது 14 வயது மகளும் பாசமாகப் பழகுவது போல நடித்து வந்துள்ளனர். அந்தப் பெண்ணுக்கு இருந்த கடன் தொல்லையைத் தீர்க்க, பாட்டியின் 10 சவரன் நகையைப் பறிக்கத் திட்டம் போட்டுள்ளார். இதற்காக அந்த பெண் தனது மகளிடம் பாயாசம் செய்யச் சொல்லி, அதில் தூக்க மாத்திரைகளைக் கலந்து பாட்டிக்குக் கொடுக்க வைத்துள்ளார். அதனைத் தெரியாமல் குடித்த பாட்டி மயக்கமடைய, அவரது நகைகளைத் திருடிச் சென்று அடகு வைத்துள்ளனர்.
மறுநாள் காலையில் நகைகள் திருடு போனதைக் கண்ட பாட்டி, காவல்துறையில் புகார் அளித்தார். விசாரணையில் இறங்கிய போலீசார், அந்த வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தாய் மற்றும் மகளைக் கைது செய்தனர். திருடப்பட்ட நகைகள் மற்றும் பணத்தைப் பறிமுதல் செய்த போலீசார், தாயைச் சிறையிலும், சிறுமியை அரசு கூர்நோக்கு இல்லத்திலும் சேர்த்தனர். தெரிந்தவர்களாக இருந்தாலும், தனியாக இருக்கும் முதியவர்கள் உணவு மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
