“இந்தியா எதையும் மன்னிக்காது!” – ஆப்ரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு.. பாகிஸ்தானை அதிரவைத்த வீடியோவை வெளியிட்ட விமானப் படை..!!

By Swetha on வைகாசி 7, 2026

Spread the love

‘ஆபரேஷன் சிந்தூர்’ ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, இந்திய விமானப்படை (IAF) சமூக வலைதளத்தில் ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது. “இந்தியா எதையும் மறக்காது, இந்தியா எதையும் மன்னிக்காது” என்ற வலிமையான முழக்கத்துடன் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், கடந்த ஆண்டு பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதல்களின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தத் தாக்குதலின் போது இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் துல்லியமான வழிகாட்டுதல் குண்டுகள் பாகிஸ்தானின் பயங்கரவாத உள்கட்டமைப்புகளை நிலைகுலையச் செய்தன. பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகம் மற்றும் முரிட்கேவில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா தளம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ராணுவ நிலைகள் உருக்குலைந்ததை இந்த வீடியோ உறுதிப்படுத்துகிறது.

   

   

“ஒவ்வொரு பயங்கரவாதியையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பவர்களையும் இந்தியா கண்டறிந்து தண்டிக்கும்” என்று பிரதமர் நரேந்திர மோடி அந்த வீடியோவில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவின் இந்த உறுதியான ராணுவ நடவடிக்கை பாகிஸ்தானின் அணுஆயுத மிரட்டல்களை முறியடித்து, அவர்களைப் போர் நிறுத்தத்திற்குப் பணிய வைத்தது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கையில் இந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.