“இந்த நேரத்துல இங்க என்ன வேலை?”… மாணவனுடன் இருந்தபோது நடந்த விபரீதம்… நள்ளிரவில் காட்டுக்குள் பணம் பறித்த போதை கும்பல்…!!

By Gayathri on ஆவணி 29, 2026

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த காதர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஷமீல் அகமது. வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமிய கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் இவர், சில நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் ரெட்டித்தோப்பு காட்டுப்பகுதியில் ஒரு பள்ளி மாணவருடன் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சில போதை ஆசாமிகள், அவர்கள் இருவரையும் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பேராசிரியரை கடுமையாகத் தாக்கி மிரட்டிய அந்த கும்பல், அவரிடமிருந்த பணம் மற்றும் செல்போனை வலுக்கட்டாயமாகப் பறித்துச் சென்றது.

தாக்குதல் நடத்தியதோடு மட்டுமின்றி, அந்த செயலைத் தங்களது செல்போனிலும் அந்த கும்பல் வீடியோவாக பதிவு செய்துள்ளது. பின்னர் அந்த காட்சிகளைச் சமூக வலைதளங்களில் அவர்கள் பதிவேற்றம் செய்த நிலையில், தற்போது அந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறமிருக்க, அடையாளம் தெரியாத சில நபர்கள் அந்த பேராசிரியரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மேலும் பணம் தரக் கோரித் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.

   

இந்தத் தொடர் மிரட்டல்களால் அதிர்ச்சியடைந்த ஷமீல் அகமது, ஆம்பூர் நகரக் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகளை முக்கிய ஆதாரமாகக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். பணம் பறித்து மிரட்டல் விடுத்ததுடன் தலைமறைவாக உள்ள அந்த நபர்களைப் பிடிக்க போலீசாரின் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.