ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள உறைவிடப் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர், கோடை விடுமுறையின்போது வீட்டில் தனியாக இருந்த தருணத்தில் தனியார் ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கர்ப்பமாகியுள்ளார். அப்பகுதியில் நிலவிய கடுமையான வெப்பநிலை காரணமாக மார்ச் மாதத்திலேயே பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த விடுமுறை காலத்தில்தான் இந்த கோரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
பள்ளியின் இந்த வார தொடக்கத்தில் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட வழக்கமான மருத்துவப் பரிசோதனையின்போது, அந்த மாணவி சுமார் 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக மாணவியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்ததை அடுத்து, பெற்றோரிடம் பேசிய மாணவி தமக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்தும், இந்தச் சம்பவம் குறித்து யாரிடமும் கூறக்கூடாது என ஆசிரியர் மிரட்டியது குறித்தும் விளக்கிக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். குற்றச்சாட்டுக்கு உள்ளான தனியார் ஆசிரியரைக் கைது செய்துள்ள போலீசார், மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள மாணவிக்கு நீதி வழங்கும் பொருட்டு இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
