ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் ஒருவரும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரும் கடந்த சில காலமாகத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். திருச்சியில் உள்ள பிரபல ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த அந்த வாலிபர், தில்லை நகர் பகுதியில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். அவரை காதலித்து வந்த இளம் பெண், திருச்சியின் காஜாமலை பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை பட்டம் பயின்று வரும் மாணவியாவார். இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்குத் தெரியவரவே, மாணவியின் பெற்றோர்கள் இவர்களின் காதலுக்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், பெற்றோர்கள் அந்த மாணவிக்கு வேறு ஒரு இடத்தில திருமணம் செய்யத் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர். இந்த விபரத்தைத் தொலைபேசி வாயிலாக அந்த மாணவி தனது காதலனிடம் கூறி வருந்தியுள்ளார். அதற்கு அந்த வாலிபர், அவசரப்பட்டு இப்போது எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்றும், எதுவாக இருந்தாலும் நேரில் சந்தித்துப் பேசிக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். அதன்படி, திருச்சியில் உள்ள ஒரு பூங்காவிற்கு வருமாறு காதலிக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். காதலனின் வார்த்தையை நம்பி அந்த மாணவியும் நேரில் பேசுவதற்காகக் குறிப்பிட்ட அந்தப் பூங்காவிற்கு வந்துள்ளார்.
பூங்காவில் அமர்ந்து இருவரும் தங்களது காதல் குறித்தும், வீட்டின் எதிர்ப்பு மற்றும் மாற்றுத் திருமணம் குறித்தும் நீண்ட நேரமாகப் பேசியுள்ளனர். இந்த விவாதத்தின் போது, காதலி தனது பேச்சுக்கு உடன்பட மறுத்ததால் ஆத்திரமடைந்த காதலன், அவளைக் கொடூரமாகத் தாக்கத் தொடங்கியுள்ளார். அடி தாங்க முடியாமல் மாணவி கீழே விழுந்த நிலையிலும், வெறித்தனம் அடங்காத வாலிபர் அருகில் கிடந்த பெரிய கல்லை எடுத்து அவளது முகத்திலேயே கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் முகம் சிதைந்து பலத்த காயமடைந்த மாணவி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
இதனைப் பார்த்த பூங்காவில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக அந்த வாலிபரைத் தடுத்து நிறுத்தி மாணவியை மீட்டனர். பின்னர் பலத்த காயமடைந்த மாணவியை அவசரமாக அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோட முயன்ற காதலனை பொதுமக்கள் துரத்திப் பிடித்து, தர்மஅடி கொடுத்து, அவரது கைகளைக் கயிறுகளால் கட்டிப் போட்டனர். இதுகுறித்து உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரிடம் அந்த வாலிபர் ஒப்படைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து கே.கே.நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, வாலிபரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
