சென்னையை அடுத்த தாம்பரம் அருகே, தன் 5 வயதுக் குழந்தையின் கண்முன்னே தாய் ஒருவர் சொந்தத் தம்பியாலேயே படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த அந்தப் பெண்ணிற்கு, 18 வயது இளைஞன் ஒருவனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் மற்றும் தவறான பழக்கவழக்கமே இந்த கொடூரக் கொலைக்கு முக்கியக் காரணமாக அமைந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண், தன் கணவரை விட்டுப் பிரிந்த பிறகு அந்த 18 வயது சிறுவனுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இவர்களது பழக்கம் நாளுக்கு நாள் எல்லை மீறிச் சென்றதால், குடும்பத்தின் மானம் போவதாகக் கூறி அவரது தம்பி பலமுறை அக்காவைக் கண்டித்துள்ளார். மேலும், அந்தச் சிறுவனுடனான தொடர்பைத் துண்டித்துக் கொள்ளுமாறு பலமுறை எச்சரித்தும், அந்தப் பெண் அதைக் கேட்காமல் தன் போக்கிலேயே தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தம்பி, சம்பவத்தன்று அக்காவின் வீட்டிற்குச் சென்று மீண்டும் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட கடுமையான மோதலில், ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற தம்பி, அக்காவின் 5 வயதுக் குழந்தையின் கண்முன்னே அவரை வெட்டிப் படுகொலை செய்தார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அண்டை வீட்டாரைக் கண்டு தம்பி அங்கிருந்து தப்பியோடிய நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள கொலையாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
