காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே உள்ள வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பரத் (25) மற்றும் சீனு (24). இசைக் கச்சேரிகளில் கானா பாடல்கள் பாடி வந்த இவர்களிருவரும், கடந்த 17-ஆம் தேதி மாலை படப்பை பகுதியில் நடந்த கச்சேரி ஒன்றை முடித்துவிட்டு, மணிமங்கலம் அம்மணம்பாக்கம் பகுதியில் உள்ள தங்களது நண்பரான லோகேஷ் என்பவரது வீட்டில் இரவு தங்கியுள்ளனர். அங்கு நண்பர்கள் மூவரும் இரவு முழுவதும் கானா பாடல்களைப் பாடி, இசைத்து மகிழ்ந்திருந்ததாகத் தெரிகிறது.
நள்ளிரவு நேரத்தில், லோகேஷின் வீட்டிற்கு இரண்டு இருசக்கர வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஆறு பேர் கொண்ட மர்மக் கும்பல், திடீரென வீட்டிற்குள் புகுந்து முதலில் லோகேஷைத் தாக்க முயன்றுள்ளது. இந்த திடீர் தாக்குதலில் இருந்து லோகேஷ் சாதுரியமாகத் தப்பி ஓடிய நிலையில், அங்கிருந்த கானா பாடகர்களான பரத் மற்றும் சீனு ஆகிய இருவரையும் அந்த மர்மக் கும்பல் கத்தியால் சரமாரியாக வெட்டிச் சாய்த்துள்ளது. இதில் பரத் வீட்டின் உள்ளேயும், சீனு வாசலிலும் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணிமங்கலம் காவல்துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூரக் கொலைச் சம்பவம் தொழில் போட்டியால் நடந்ததா, அல்லது தப்பியோடிய நண்பர் லோகேஷுக்கும் கொலையாளிகளுக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக நடந்ததா என்ற பல கோணங்களில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்க நடமாட்டம் மிகுந்த பகுதியில் வீடு புகுந்து நடந்த இந்த இரட்டைக் கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
