குஜராத் மாநிலம் மோர்பி பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை தேடி தன் குடும்பத்துடன் அங்கு குடிபெயர்ந்துள்ளார். அங்கு அவர் மாதம் 2,000 ரூபாய் வாடகையில் ஒரு வீட்டை எடுத்துத் தங்கியுள்ளார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவரால் தொடர்ந்து வீட்டு வாடகையைச் செலுத்த முடியவில்லை. இதனால் ஏற்பட்ட வாடகை நிலுவைத் தொகையை ஈடுகட்ட, வீட்டு உரிமையாளருக்குத் தனது மனைவி மற்றும் 13 வயது சிறுமியான தனது மகளைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொள்ள அந்தக் கணவன் வாய்மொழியாக அனுமதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கணவனின் இந்த சம்மதத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட 55 வயதான வீட்டு உரிமையாளரும் அவனது உறவினர் ஒருவரும் சேர்ந்து, அந்தப் பெண்ணையும் அவரது மைனர் மகளையும் தங்களின் சொந்த வீடு மற்றும் வாடகை வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குக் கூட்டிச் சென்று கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த கொடூரச் செயல் குறித்துப் பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டிக்குத் தெரியவந்ததை அடுத்து, அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் போக்சோ (POCSO) சட்டப் பிரிவுகளின் கீழ் மோர்பி நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை (வாடகைதாரர்) மற்றும் குற்றவாளியான வீட்டு உரிமையாளர் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இக்குற்றத்திற்கு உடந்தையாக இருந்துவிட்டு தற்போது தலைமறைவாக இருக்கும் வீட்டு உரிமையாளரின் உறவினரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
