கையில் கத்தியுடன் நின்ற சைக்கோ இளைஞன்… தாயைக் கொன்ற மகன் அடுத்தடுத்து செய்த வெறிச்செயல்… காவல்துறைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!

By Gayathri on ஆவணி 29, 2026

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்த நாரகம்விளையைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சிஜி. கடந்த 2021-ஆம் ஆண்டு பெற்ற தாயையே கொலை செய்த வழக்கில் சிறைக்குச் சென்று, தற்போது ஜாமீனில் வெளியே வந்து தந்தையுடன் வசித்து வந்தார். மனநலம் பாதிக்கப்பட்டவராகக் கூறப்படும் இவர், சம்பவத்தன்று கையில் ரத்தக்கறையுடன் கூடிய கத்தியுடன் அப்பகுதியில் மிரட்சியூட்டும் வகையில் சுற்றித் திரிந்துள்ளார். இதைக் கண்டு அச்சமடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிஜியை மடக்கிப் பிடித்து கத்தியைப் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை சமாதானப்படுத்தி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது, அருகிலுள்ள வீட்டில் பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த லீலா என்பது தெரியவந்தது. அவரது உடலில் பலத்த கத்திக்குத்து காயங்கள் இருந்ததோடு, அருகிலேயே அவரைத் தாக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு பெரிய கல்லும் கிடந்துள்ளது.

   

உயிரிழந்த லீலா, சிஜியின் நெருங்கிய உறவினர் ஆவார். தாயை இழந்து மனநலம் குன்றிய நிலையில் இருந்த சிஜி மீது பரிதாபப்பட்டு, லீலா அவருக்கு அடிக்கடி உணவு வழங்கி அக்கறையுடன் கவனித்து வந்துள்ளார். உணவுக்காகச் சென்ற இடத்தில் சிஜி அவரை கத்தியால் குத்தியும், கல்லால் தாக்கியும் கொடூரமாகக் கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். உடலைக் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார், சிஜியிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.