தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த 85 வயது சுப்புலட்சுமி என்ற மூதாட்டிக்கு இரண்டு மகன்களும் மூன்று மகள்களும் உள்ளனர். கணவர் இறந்த பிறகு அனைத்து சொத்துகளையும் பிள்ளைகளுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டு, பூர்விக வீட்டில் மூத்த மகன் கஸ்தூரி குடும்பத்துடன் வசித்து வந்தார். ஆனால் தாயை கவனித்துக் கொள்வதாகச் சொல்லி அந்த வீட்டை எழுதி வாங்கிய மகன், பின்னர் அவரை வீட்டைவிட்டு துரத்திவிட்டார். இதனால் பாதிக்கப்பட்ட மூதாட்டி போலீசில் புகார் செய்துள்ளார்.
தாய் அல்லது தந்தையை பராமரிப்பதாக உறுதி கொடுத்து சொத்தை எழுதி வாங்கிய மகன் அல்லது மகள், பின்பு அதை செய்யத் தவறினால் அந்தச் சொத்தை சட்டரீதியாக திரும்பப் பெறலாம். இது பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் 2007 என்ற மத்திய சட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
இச்சட்டப்படி, அடிப்படை வசதிகளும் உடல்நலக் கவனிப்பும் கிடைக்கும் என்ற நிபந்தனையுடன் தானமாகவோ அல்லது மாற்று ஆவணம் மூலமாகவோ பிள்ளைகள் அல்லது உறவினருக்கு சொத்து எழுதிக் கொடுக்கப்படுகிறது. சொத்து பெற்றவர் அந்த நிபந்தனையை மீறி மூத்தவர்களை புறக்கணித்தால், அந்த ஆவணம் ரத்தாகி சொத்து மீண்டும் அந்த மூதாட்டி அல்லது முதியவருக்கே திரும்பக் கிடைக்கும்.
இதற்காக மூத்த குடிமக்கள் வருவாய் கோட்டாட்சியர் அல்லது மாவட்ட ஆட்சியர் தலைமையிலான முதியோர் பராமரிப்புத் தீர்ப்பாயத்தை அணுகி புகார் செய்யலாம். நீதிமன்றம் செல்லத் தேவையில்லை. தீர்ப்பாயத்தில் புகார் கொடுத்தால் போதும், கலெக்டர் உடனே சொத்தை திரும்ப மாற்றி தருவார். இந்தச் சட்டத்தால் ஏற்கெனவே பல முதியவர்கள் தங்கள் சொத்துகளை மீட்டுள்ளனர்.
