சென்னை சைதாப்பேட்டை விஜிபி சாலையில் வசிப்பவர் 32 வயது சுலைமான். தனியார் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றும் இவருக்கு கிண்டி லாயர் ஜெகநாதன் தெருவில் உள்ள தனியார் வங்கியில் சேமிப்பு கணக்கு உண்டு. இதனால் அடிக்கடி வங்கிக்குச் சென்று பணம் போட்டு எடுத்து வருவதால் வங்கி மேலாளர் சாமிநாதனுடன் நல்ல நட்பு ஏற்பட்டது.
கடந்த ஜூலை 2-ஆம் தேதி நகை அடகு வைக்க வேண்டும் என்று சுலைமான் சாமிநாதனிடம் தொலைபேசியில் தெரிவித்தார். அதற்கு சாமிநாதன், நீங்கள் வங்கிக்கு வரத் தேவையில்லை, நான் ஊழியரை அனுப்பி உதவுகிறேன் என்று சொன்னார். அதன்படி பணம் தேவைப்படும் போது சுலைமான் சாமிநாதனைத் தொடர்பு கொள்வார். அப்போது மேலாளர் ஊழியரை சுலைமான் வீட்டுக்கு அனுப்புவார். ஊழியர் படிவங்களை நிரப்பி தேவையான பணத்தை வழங்கிவிடுவார்.
அந்த வகையில் ஜூலை 2-ஆம் தேதி வங்கி கேஷியர் பிரசாத் என்பவரை சுலைமான் வீட்டுக்கு சாமிநாதன் அனுப்பினார். சுலைமான் வீட்டிலிருந்த 162 சவரன் நகைகளை எடுத்து கேஷியரிடம் கொடுத்து அடமானம் வைத்தார். கேஷியர் நகை பெற்றுக்கொண்டு படிவத்தில் கையெழுத்து வாங்கி வங்கிக்கு திரும்பினார்.
பின்னர் சுலைமான் சாமிநாதனை அழைத்து பணம் கேட்டார். ஆனால் சாமிநாதன் சர்வர் பிரச்சினை, ஆடிட்டிங் போகிறது என்று ஏதோ காரணம் சொல்லி காலத்தைத் தாழ்த்தினார். இதில் சந்தேகமடைந்த சுலைமான் நேரடியாக வங்கிக்குச் சென்று விசாரித்தபோது சாமிநாதன் பண மோசடியில் சம்பந்தப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதை அறிந்தார்.
அதிர்ச்சியடைந்த சுலைமான் உடனடியாக சைதாப்பெட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணைத் தொடங்கியதில் சுலைமான் கொடுத்த நகைகளை சாமிநாதன் பயன்படுத்தப்படாத வாடிக்கையாளர் கணக்குகளில் அடகு வைத்து 90 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.
இதில் 25 வயது கேஷியர் பிரசாத், 32 வயது வங்கி ஆப்ரேட்டிங் மேலாளர் திவாகர் ஆகியோரும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. போலீசார் கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி அவர்களை கைது செய்தனர். முக்கிய குற்றவாளி சாமிநாதனைத் தேட தனிப்படையை அமைத்தனர். இந்நிலையில் சாமிநாதன் தெலங்கானா ஐதராபாத்தில் பதுங்கியிருப்பதாகத் தெரிந்தது. அதன்படி தனிப்படை போலீசார் ஐதராபாத்திற்குச் சென்று அவரைச் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
