பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியாக முன்னேறிய ‘கிரீமி லேயர்’ (Creamy Layer) பிரிவினருக்கு இடஒதுக்கீடு சலுகையை நீட்டிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளது. இதுதொடர்பான மனுவை விசாரித்த நீதிபதி பி.வி. நாகரத்னா தலைமையிலான அமர்வு, இடஒதுக்கீடு மூலம் ஏற்கனவே கல்வியிலும் பொருளாதாரத்திலும் உயர்மட்டத்தை எட்டிய குடும்பங்களுக்கு ஏன் இன்னும் அந்த சலுகை தொடர வேண்டும் என்று வினவியுள்ளது. ஒரு தலைமுறை இந்த சலுகையைப் பயன்படுத்தி சமூகத்தில் முன்னேறிய பிறகு, அடுத்த தலைமுறையின் தகுதிகள் மற்றும் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து கண்டிப்பாக மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.
வழக்கின் உதாரணங்களைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பெற்றோர் இருவரும் ஐஏஎஸ் (IAS) அதிகாரிகள் போன்ற உயர்பதவிகளில் இருந்து நல்ல வருமானம் ஈட்டும் பட்சத்தில், அவர்களது பிள்ளைகளுக்கு மீண்டும் இடஒதுக்கீடு கோருவது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பினர். கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக ஒரு குடும்பத்திற்கு அதிகாரம் கிடைக்கும்போது, சமூகத்தில் அவர்களின் அந்தஸ்து தானாகவே உயர்ந்துவிடுகிறது என்றும், இந்த மாற்றத்திற்குப் பிறகும் அடுத்தடுத்த தலைமுறையினர் இடஒதுக்கீட்டைத் தொடர நினைத்தால், இந்த அமைப்பிலிருந்து நாம் ஒருபோதும் வெளியே வர முடியாது என்றும் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
அதேநேரம், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீடு (EWS) என்பது முற்றிலும் பொருளாதார நிலையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்றும், அதில் சமூக ரீதியாக பின்தங்கிய நிலை என்ற கோணம் கிடையாது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். சமூக மாற்றத்தை அடைந்த பிறகும் சலுகைகளைத் தொடர்வது குறித்த இந்த விவாதத்தில், உரிய விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்ற அமர்வு ஒத்திவைத்துள்ளது.
