தமிழக பாஜகவின் முக்கியத் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன், திமுக தலைமையிலான கூட்டணியில் பெரும் குழப்பம் நிலவுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியினர் திமுகவுக்கு எதிராகப் பேசி வருவது ராகுல் காந்தியின் அனுமதியோடுதான் நடக்கிறதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அமித்ஷாவை அவதூறு ஷா என்று முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்ததற்குப் பதிலடி கொடுத்த அவர், நேர்மையாக நடப்பவர்களுக்கு அமித்ஷா அன்பானவராக இருப்பார் என்றும், தவறானவர்களுக்கு அவர் ‘அவதூறு ஷாவாக’ தெரிவார் என்றும் சாடியுள்ளார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்துக்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தும், தமிழக அரசு மேல்முறையீடு செய்யத் துடிப்பது கண்டிக்கத்தக்கது என தமிழிசை தெரிவித்தார். நடிகர் விஜய்யின் அரசியல் குறித்துப் பேசுகையில், திமுகவை வீழ்த்த வேண்டுமானால் எதிர்க்கட்சிகள் உதிரியாகப் பிரியாமல் ஒரே அணியில் நிற்க வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இணைந்திருப்பதன் மூலம் தங்கள் பலம் அதிகரித்துள்ளதாகவும், திமுகவின் ஊழல்களை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.
