திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் கோபாலகிருஷ்ணன் (45) என்பவர் வசித்து வருகின்றார். குடி போதைக்கு அடிமையான இவர் தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் பிரச்சனை செய்து வந்ததால் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து இறந்த நிலையில் கோபாலகிருஷ்ணன் தனியாக வசித்து வந்துள்ளார். அதேபோல பரமேஸ்வரி என்பவர் தனது கணவர் உயிரிழந்த நிலையில் மகன் மனோஜ் குமார் மற்றும் இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
மனோஜ் குமார் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கடையில் பணியாற்றி வரும் நிலையில் கோபாலகிருஷ்ணனுக்கும் பரமேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி அடிக்கடி தனிமையில் இருந்து உள்ளனர். இந்நிலையில் மனோஜ் குமார் அதே பகுதியில் வேலை செய்வதால் அடிக்கடி இடையில் வீட்டுக்கு வந்து செல்லும்போது தாயின் கள்ளக்காதலை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பரமேஸ்வரி மற்றும் கோபாலகிருஷ்ணனை அவர் கண்டித்ததால் இருவரும் இதனை கண்டுக்காமல் தொடர்ந்து பழகி வந்தனர்.
இதனிடையே நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் கோபாலகிருஷ்ணன் பரமேஸ்வரி வீட்டுக்கு சென்ற நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபாலகிருஷ்ணன் பரமேஸ்வரியை தகாத வார்த்தைகளால் திட்டிய நிலையில் அங்கு வந்த மனோஜ் குமார் தனது தாயை அடிக்க சென்ற கோபாலகிருஷ்ணனை பார்த்து ஆத்திரம் அடைந்துள்ளார். பிறகு யார் வீட்டில் வந்து யார் அதிகாரம் செய்வது என கேட்டு அருகில் இருந்த பெரிய கல்லை கொண்டு கோபாலகிருஷ்ணன் தலையில் பலமாக தாக்கியதால் அவர் சம்பவ இடத்திலே தலை நசுங்கி உயிரிழந்தார்.
இதனைப் பார்த்த மக்கள் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கோபாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொலை செய்து விட்டு தப்பிச்சென்ற மனோஜ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
