கட்சி தொடங்கப்பட்ட வெறும் இரண்டே ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சிக்கட்டிலை ஏறி ஒட்டுமொத்த இந்தியாவையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது தமிழக வெற்றிக் கழகம். ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் இக்கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் விஜய்யை, தேசிய அளவிலான முக்கியத் தலைவராக முன்னிறுத்தும் வேலைகள் தீவிரமடைந்துள்ளன. அதன் வெளிப்பாடாக, சமீபத்தில் வெளியான இந்தியா டுடேவின் அடுத்த பிரதமருக்கான மக்கள் விருப்பக் கணிப்பில், நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்திக்கு அடுத்தபடியாக விஜய் மூன்றாவது இடத்தைப் பிடித்து தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யின் அணுகுமுறை குறித்துப் பெருமிதத்துடன் பேசினார். முதலமைச்சர் என்ற எவ்வித பந்தாவும் இல்லாமல் அனைவரிடமும் சகஜமாகப் பழகி, சட்டமன்ற உறுப்பினர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களுடன் அமர்ந்து நேரத்தைச் செலவிட்டதாகக் குறிப்பிட்டார். மேலும், தற்போதைய சட்டமன்றத்தை ஒரு ‘நாடக மேடை’ என விமர்சித்த அண்ணாமலையின் கருத்தைப் புறக்கணித்த அவர், வீண் விவாதங்களைத் தவிர்த்து மக்கள் நலனிலும் மாநில வளர்ச்சியிலுமே இந்த அரசு முழு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
குறுகிய காலத்திலேயே மக்கள் போற்றும் பல திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருவதாகக் கூறிய செங்கோட்டையன், விவசாயிகளுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் கரும்புக்கு டன் ஒன்றிற்கு 4,000 ரூபாயும், நெல்லுக்கு குவிண்டாலுக்கு 2,750 ரூபாயும் கொள்முதல் விலையாக வழங்கி சாதனை படைத்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். முந்தைய அரசுகளை விட விவசாயிகளின் நலனில் அதிக அக்கறை காட்டும் அரசாக தவெக திகழ்கிறது என்றும், நேர்மையான நிர்வாகத்தை வழங்குவோம் என்ற வாக்குறுதியை முதலமைச்சர் துணிச்சலுடன் நிறைவேற்றி வருவதால், அவர் விரைவில் தேசிய அளவில் தவிர்க்க முடியாத தலைவராக உருவெடுப்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
