தமிழ்த்திரையுலகில் இதுவரை யாரும் செய்திடாத பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர். சினிமாவின் பல்கலைக்கழகம் என அழைக்கப்படும் ஏவி மெய்யப்ப செட்டியார் தமிழ் சினிமாவிற்குக் கிடைத்த பொக்கிஷம் என்றே சொல்லலாம். அன்றைய காலத்தில் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ், எஸ்.எஸ்.வாசன், சின்னப்ப தேவர், விஜயவாஹினி போன்ற பெரும் திரைப்பட தயாரிப்பு ஜாம்பவான்களுக்கு மத்தியில் தனக்கென தனி ஸ்டைலில் தரமான படங்கள் பலவற்றைக் கொடுத்து இன்றும் கம்பீரமாக நிற்கிறது ஏவிஎம் நிறுவனம்.

#image_title
இந்நிறுவனத்தை ஆரம்பித்த ஏவிமெய்யப்ப செட்டியார் திரைப்படங்களுக்காக செய்த சாதனைகளின் பட்டியலை சொன்னால் நாள் போதாது. தான் கூட்டுசேர்ந்து தயாரித்த முதல் மூன்று படங்கள், தொடர் தோல்வியடைந்து, பெரும்நட்டத்தைச் சந்தித்தாலும், மனம் தளர்ந்து திரையுலகை விட்டு ஒதுங்காமல், தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, தனியாக படம் தயாரித்து, வெற்றியைக் கண்ட தன்னம்பிக்கையாளர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார்.

#image_title
தமிழின் முதல் முழுநீள நகைச்சுவைப்படமான “சபாபதி” படத்தை இயக்கியவர் இவர்தான். இப்படம் இன்றைய தலைமுறையினராலும் விரும்பிப் பார்க்கும் படங்களில் ஒன்று. மேலும் தமிழின் முதல் டப்பிங் படமான அரிச்சந்திரா படத்தை வெளியிட்டவர். கன்னடபடமான அரிச்சந்திராவை, தமிழில் டப்பிங் செய்த பெருமை ஏவிம்-ஐ சாரும்.
சொந்தகுரலில் பாடுபவர்களே பிரதான பாத்திரங்களேற்று தமிழ்திரைப்படங்களில் நடிக்கமுடியும் என்றநிலையை மாற்றி, முதல்முறையாக நந்தகுமார் திரைப்படத்தில், துணை கதாபாத்திரம் பாடும் பாடலுக்கு லலிதா வெங்கட்ராமன் என்பவரையும், ஶ்ரீவள்ளி படத்தில், நாயகி ருக்மணிக்கு, பெரியநாயகி என்ற பாடகியையும் பின்னணி பாடவைத்து, தமிழ்திரையுலகில், மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்.
பாவமன்னிப்பு திரைப்படத்தை விளம்பரப்படுத்த, அப்படப்பாடல்களை வரிசைப்படுத்தும் போட்டி நடத்தினார். ராட்சச பலூனில் படப்பெயரையும், தன் நிறுவனப் பெயரையும் பொறித்துப் பறக்கவிட்டார். பாட்டு வரிசைப்போட்டி மூலம் பட விளம்பரம் செய்த, தமிழ்த் திரையுலகின் இரண்டாவது தயாரிப்பாளரும், ராட்சச பலூன் மூலம் படவிளம்பரம் செய்த முதல் தயாரிப்பாளரும் இவர்தான்.

#image_title
பாவமன்னிப்பு திரைப்படம் முதலில், “அப்துல்லா” என்ற பெயரில், பீம்சிங் தயாரிப்பு−இயக்கத்தில் உருவாக்கப்பட்டு, படம் சிறிதளவு வளர்ந்த நிலையில், பீம்சிங்கிற்குப் படம் திருப்திதராத நிலையில், அதைக் கைவிட முடிவுசெய்தார். ஏ.வி. மெய்யப்ப செட்டியாா், அதையறிந்து, படக்கதையைக் கேட்டு, படத்தைக் கைவிடவேண்டாமென்றும், தாமும் தயாரிப்பில் இணைவதாகவும், திரைக்கதையை பலமடங்கு மெருகேற்றி, தேவையான சகல மாற்றங்களையும் புகுத்தி தயாரிக்குமாறு பீம்சிங்கிடம் கூறி, அதுவரை அவர் அப்படத்திற்குச் செலவுசெய்த நான்கரை லட்சம் ரூபாய் அளித்து, படத்தயாரிப்பில் இணைந்து, கூடுதலாக ஆறுலட்சம் ரூபாய் செலவழித்தாா். பீம்சிங் அவ்வாறே செய்து, சந்திரபாபுவை நீக்கி, சிவாஜியை நாயகனாக்கி, புதுமெருகுடன், “பாவமன்னிப்பு” படத்தை உருவாக்கினார். படம் வெள்ளிவிழா கண்டது.
பாடல்களே இல்லாமல் வெளியான தமிழின் முதல்படமான “அந்தநாள்” படம் வசூல்ரீதியாக தோல்வி கண்டது. எனினும், தான் ஒரு தரமான, வித்யாசமான படத்தை அளித்ததை எண்ணி மகிழ்ந்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார், வருந்தவில்லை.
அவசியமென்றால் லட்சரூபாயும் செலவழிக்கலாம். அநாவசியமென்றால், ஒற்றை ரூபாயையும் செலவழிக்கக் கூடாதென்ற கொள்கைகொண்டவர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார். அன்பே வா படத்தை, சுமாா் 30 லட்சரூபாயில் தயாரித்தவர், தான் இறப்பதற்கு முன்தினம் இரவில், அறை ஒன்றில் மின்விளக்கு வீணாக எரிவதைக் கண்டு, அதை நிறுத்துமாறு தம் மகனிடம் கூறினார்.

#image_title
நீண்டகாலமாக தன்னிடம் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு, குடியிருப்புகள் கட்டித்தந்தாா்; பலருக்குத் திருமணங்களையும் செய்து வைத்தார். சபாபதி படத்தில், நாயகன் டி.ஆர். ராமச்சந்திரனுக்கு மாதம் ஐந்துரூபாய் சம்பளமளித்தவர், வேலைக்காரன் வேடத்தில் நடித்த காளி.என்.ரத்தினத்துக்கு, முந்நூறு ரூபாய் அளித்தார். காரணம், அவரையன்றி, அவ்வேடத்தை, யாராலும், நேர்த்தியாகவும், இயல்பாகவும், சிறப்பாகவும் நடிக்கவியலாதென்று கருதியதுதான் இதற்குக் காரணம்.
