கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மாதம்பள்ளி கிராமத்தில், பள்ளி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி இரண்டு வயது சிறுமி நிஷா உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனிகாசலம் – ஐஸ்வர்யா தம்பதியரின் மூத்த மகளைப் பள்ளிக்கு அனுப்ப வந்தபோது, அவரது அடையாள அட்டையை எடுக்கத் தாய் வீட்டிற்குச் சென்றார். அந்தச் சமயம் எதிர்பாராத விதமாகப் பள்ளி வாகனத்தை ஓட்டுநர் திருப்ப முயன்றபோது, அருகே நின்றிருந்த சிறுமி நிஷா பேருந்தின் அடியில் சிக்கி தலை நசுங்கி அந்த இடத்திலேயே பலியானார்.
தன்னுடைய கண் முன்னாலேயே இளைய மகள் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைக் கண்ட தாய் ஐஸ்வர்யாவின் கதறல் சத்தம் அங்கிருந்தவர்களைக் கண்ணீர் விடச் செய்தது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மத்தூர் காவல்துறையினர் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றியதுடன், வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடையாள அட்டையை எடுக்கச் சென்ற ஒரு நிமிட இடைவெளியில் நேர்ந்த இந்த விபத்து, அக்கிராமத்தையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
