திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தீக்குளித்த பூரண சந்திரன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து மதுரை அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பூரண சந்திரனின் உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு கூடிய பாஜகவினர் மற்றும் சில அமைப்பினர், இச்சம்பவம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் மருத்துவமனை வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.
இந்நிலையில், உடற்கூறு ஆய்வு முடிவடைந்ததைத் தொடர்ந்து தனது மகனின் உடலைப் பெற்றுக்கொண்ட அவரது தாயார், கண்ணீர் மல்க ஒரு வேண்டுகோளை விடுத்தார். “யாரும் இந்தப் பிரச்சினையை வளர்க்க வேண்டாம்; எனது மகனின் உடலை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்” என்று அவர் அங்கிருந்தவர்களிடம் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார். மகனை இழந்த சோகத்தில் இருக்கும் தாயின் இந்த வேண்டுகோள், அங்கு கூடிருந்தவர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது உடல் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
