வரவிருக்கும் ஆகஸ்ட் 12 அன்று வட அரைக்கோளப் பகுதிகளில் நிகழவுள்ள மிக அரிய முழு சூரிய கிரகணம் உலகளாவிய வானியல் ஆர்வலர்களை ஈர்த்துள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு ஊடுருவும்போது ஏற்படும் இந்த நிழல் மாற்றத்தால், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யாவின் வடபகுதி, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய இடங்களில் முழு சூரிய கிரகணமும், அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவின் பெரும்பகுதிகளில் பகுதி கிரகணமும் தெளிவாகத் தெரியும். ஐஸ்லாந்தின் மேற்குப் பகுதியில் இதன் உச்சகட்டம் சுமார் 2 நிமிடங்கள் 18 வினாடிகள் நீடிக்கும். மேலும், இதே இரவில் புகழ்பெற்ற பெர்சீயிட் விண்கல் மழையும் அமாவாசையும் இணைந்து வருவது இந்த நிகழ்வின் சிறப்பை மேலும்ூட்டுகிறது. இந்த முழுப் பேராச்சரிய நிகழ்வும் தொடக்கம் முதல் முடிவு வரை சுமார் 4 மணி 23 நிமிடங்கள் நீடிக்கவுள்ளது.
இந்தக் கிரகணத்தின் போது சூரியனின் மேலடுக்கு வளிமண்டலமான ‘கொரோனா’ பகுதியை ஆய்வு செய்ய நாசா தீவிர ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மேகமற்ற வளிமண்டலத்தின் மேல் பகுதியில் இருந்து துல்லியமான புகைப்படங்களைப் பெற விமானங்கள் ஈடுபடுத்தப்படுவதோடு, அமெரிக்கப் பல்கலைக்கழக மாணவர்கள் மூலம் ஐஸ்லாந்து மற்றும் ஸ்பெயினில் அறிவியல் பலூன்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இதைக் காண ஐரோப்பா மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் சுற்றுலா பயணிகள் பெருமளவில் குவிந்துள்ளனர். இதற்கிடையே, சூரிய கிரகணத்தை வெறும் கண்களாலோ அல்லது சாதாரண கண்ணாடிகளாலோ பார்க்கக் கூடாது என்றும், ISO 12312 -2 சான்றிதழ் பெற்ற பிரத்யேக சூரிய கிரகணக் கண்ணாடிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் நாசா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய நேரப்படி இந்த நிகழ்வு ஆகஸ்ட் 12 அன்று இரவு நேரத்தில் நடைபெறுவதால், இந்தியாவில் இதனை நேரில் காண முடியாது. இருப்பினும், வான்வெளி ஆர்வலர்கள் இந்த அரிய நிகழ்வைத் தவறவிடாமல் கண்டு களிக்கும் வகையில், நாசா தனது அதிகாரப்பூர்வ தளம் மற்றும் சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் நேரலை ஒளிபரப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளது. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தங்களது மொபைல் மற்றும் கணினிகள் மூலமாகவே இந்த பிரம்மாண்டமான வானியல் அற்புதத்தை நேரடியாகக் கண்டு ரசிக்கலாம்.
