மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த அஷ்வந்த் மற்றும் அனிதா ஆகிய இருவர், குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார், இளைஞரின் குடும்பத்தினர் மீது தொடர் மோதலில் ஈடுபட்டு வந்தனர். இதன் உச்சகட்டமாக, அஷ்வந்தின் சகோதரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அனிதாவின் தந்தை மற்றும் உறவினர்கள் ஜன்னல் வழியாக பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த கோரமான தீ விபத்தில் வீட்டின் அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. குறிப்பாக, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 35 சவரன் தங்க நகைகள் வெப்பத்தில் உருகி வீணானதுடன், 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் எரிந்து போனது. இச்சம்பவம் குறித்து அஷ்வந்த் தரப்பினர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அனிதாவின் தந்தை கவிராஜன் மற்றும் அவரது சகோதரரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
