பாகிஸ்தானில் தானியங்கி காரை சோதிக்கும் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. முகமது ஆலிஜா என்ற பாகிஸ்தான் பத்திரிகையாளர், ஓட்டுநர் இல்லாமல் தாமாகவே இயங்கும் ஒரு காரின் முன் இருக்கையில் அமர்ந்தபடி அதைப் பெருமையுடன் வீடியோ எடுத்தார். அந்த வீடியோவில் “பாகிஸ்தானில் திறமைக்கு பஞ்சமில்லை” என்று அவர் கூறிக் கொண்டிருந்த சில நொடிகளிலேயே, அந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காவல் துறை வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்துக்கு இணையச் சேவையில் ஏற்பட்ட தடையே முக்கியக் காரணம் என்றும், அதனால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு கார் கட்டுப்பாட்டை இழந்தது என்றும் ஆலிஜா விளக்கமளித்துள்ளார். எஹ்சான் ஜாபர் என்ற தொழில்நுட்ப ஆர்வலர் உருவாக்கிய இந்த காரின் விபத்து வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரின் கேலிக்கு உள்ளானது. குறிப்பாக, இந்திய நடிகர் ரன்வீர் ஷோரே இந்த வீடியோவைப் பகிர்ந்து, டெஸ்லா காருக்கு பாகிஸ்தானின் கண்டுபிடிப்பு “தி மஸ்லா” என்று நகைச்சுவையாக விமர்சித்துள்ளார்.
காவல் துறை வாகனத்தின் மீது கார் மோதியபோதும், சம்பந்தப்பட்டவர்கள் மீது இஸ்லாமாபாத் போலீசார் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. இதுகுறித்து விளக்கம் அளித்த காவல்துறை அதிகாரி டாக்டர் அயாஸ் உசேன், புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிக்கும்போது இதுபோன்ற கோளாறுகளும், மனிதத் தவறுகளும் நடப்பது சகஜம் என்று கூறினார். மேலும், இந்த இளைஞர்களைத் தாங்கள் ஊக்குவிப்பதாகவும், இவர்கள் “பாகிஸ்தானின் எதிர்காலம்” என்றும் பாராட்டி பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார்.
