தஞ்சாவூர் மாவட்டம் பின்னவாசல் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டில், உயிருக்கு போராடிய ஒரு பெண்ணைக் காப்பாற்ற பெண் ஊழியர் ஒருவர் மேற்கொண்ட நடவடிக்கை அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜனவரி 3-ஆம் தேதி இரவு ராமேஸ்வரம் விரைவு ரயில் வருவதற்காகக் கேட் மூடப்பட்டிருந்த நேரத்தில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண்ணை உறவினர்கள் அவசரமாக அழைத்து வந்தனர்.
ரயில் நெருங்கிவிட்டதால் பாதுகாப்பு கருதி கேட்டைத் திறக்க முடியாத சூழல் நிலவியது. இதனால் ஒரு உயிர் முக்கியமா அல்லது ரயிலில் வரும் பல உயிர்கள் முக்கியமா என்ற இக்கட்டான நிலையில் கேட் கீப்பர் அருள் ஞானடெல்பின் தவித்தார். உறவினர்களின் கண்ணீர் போராட்டத்தைக் கண்ட அந்த ஊழியர், மனிதாபிமானத்துடன் ஒரு யோசனையை கூறினார்.
மூடியிருந்த கேட்டின் அடியில் குனிந்து அந்தப் பெண்ணை அழைத்து வருமாறு கூறியதுடன், அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லத் தனது சொந்த இருசக்கர வாகனத்தையே தந்து உதவினார். விதிகளுக்குக் கட்டுப்பட்டு ரயிலில் வந்த பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்த அதே வேளையில், தவித்த பெண்ணின் உயிரைக் காக்கவும் அவர் காட்டிய அந்தப் பேரன்பு சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
