மத்திய அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை (Gratuity) தொடர்பான புதிய விதிகளை ஓய்வூதியதாரர் நலத்துறை வெளியிட்டுள்ளது. இதன் படி, தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) உள்ள பணியாளர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி இருந்தால், அவர்கள் பெறும் மொத்த பணிக்கொடைத் தொகைக்கு ஒரு குறிப்பிட்ட உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு நபர் பொதுத்துறை நிறுவனம் அல்லது மாநில அரசில் இருந்து மத்திய அரசுப் பணிக்கு மாறினால், இரு இடங்களிலும் சேர்த்துப் பெறும் ஒட்டுமொத்தத் தொகையானது, அவர் இறுதியாக வாங்கிய ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும் அளவைத் தாண்டக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்று சிவில் பணிகளில் இணைந்தவர்களுக்கு இந்த விதிகளில் இருந்து பெரிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ராணுவப் பணிக்காக ஏற்கனவே கிராஜுயிட்டி பெற்றிருந்தாலும், சிவில் பணிக்கான தொகையைக் கணக்கிடும்போது முந்தைய தொகை தடையாக இருக்காது என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
அதே சமயம், பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு மீண்டும் அதே துறையில் மறுவேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அந்தக் குறிப்பிட்ட காலத்திற்குத் தனியாகப் பணிக்கொடை வழங்கப்படமாட்டாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
