மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது. இதன்படி, பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ₹13-லிருந்து ₹3-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது; டீசல் மீதான ₹10 வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
இந்த வரிக்குறைப்பு எண்ணெய் நிறுவனங்களுக்குப் பெரிய நிம்மதியை அளித்தாலும், வாகன ஓட்டிகளுக்கு இதனால் உடனடிப் பலன் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விற்பனை விலையில் எவ்வித மாற்றமும் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவு நுகர்வோருக்கு விலை குறைப்பை வழங்காவிட்டாலும், எதிர்காலத்தில் எரிபொருள் விலை மேலும் உயராமல் தடுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
