சென்னை அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஞானவேல் பாபு, தனது வறுமையைப் பயன்படுத்திப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக மாணவி ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகாரளித்துள்ளார். அந்தப் புகாரில், பேராசிரியர் தனக்குத் தந்தை போல் பழகிப் பண உதவி செய்ததாகவும், பின்னர் அதையே சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு கடந்த 3 ஆண்டுகளாகத் தவறான நோக்கத்தோடு தன்னிடம் பேசி வருவதாகவும் அந்த மாணவி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் கல்வி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னை துணை ஆணையர் தலைமையிலான மகளிர் போலீசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேராசிரியருக்கும் மாணவிக்கும் இடையே நடந்த உரையாடல்கள் மற்றும் ஆதாரங்களை போலீசார் ஆய்வு செய்து வரும் நிலையில், புகாரில் உள்ள உண்மைத்தன்மை குறித்து பேராசிரியரிடமும் விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
