லக்னோவில் 22 வயதான ஷிவானி சிங் என்ற பெண், தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்த நான்கே நாட்களில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய காவல்துறை, ஷிவானியின் காதலனான பிரேம் குமார் மாஞ்சி என்பவரைக் கைது செய்துள்ளது. காவல்துறையின் விசாரணையின்போது, பொறாமை மற்றும் சந்தேகத்தின் காரணமாகவே இந்த கொலையைச் செய்ததாகக் குற்றவாளி ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தக் கொடூரக் கொலை குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தன்று பிரேம் குமார், ஷிவானியை ரப்பர் குழாயால் கழுத்தை நெரித்துக் கொன்றதோடு மட்டுமல்லாமல், அவரது தலையை செங்கலால் தாக்கி சிதைத்து, உடலை புதரில் வீசிச் சென்றுள்ளார். குற்றவாளி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட செங்கலை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
