மத்திய அமைச்சரவை அண்மையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்துவது தொடர்பான முடிவுகளை எடுத்த நிலையில், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இந்தியப் பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார். 2024 மக்களவைத் தேர்தலின் போதே ‘நாரி சக்தி வந்தன் அதினியம் 2023’ சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் விடுத்த கோரிக்கையை பிரதமர் நிராகரித்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய இந்த திடீர் அறிவிப்பானது, மோடி அரசின் நிர்வாகத் தோல்விகளையும், வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளையும் திசைதிருப்புவதற்காக எடுக்கப்பட்ட ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். தகவலறிந்த வட்டாரங்களின்படி, 2029-ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816-ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில் வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் இதற்கான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாகத் தெரிகிறது. கடந்த காலங்களில் பெண்களுக்கான உரிமைகளை வழங்கத் தவறியதற்காகவும், அரசியல் ஆதாயங்களுக்காக நீண்ட காலம் காலம் கடத்தியதற்காகவும் பிரதமர் இந்தியப் பெண்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டிருப்பதாக ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
