வீட்டில் தினமும் 10 நிமிடம் பூஜை செய்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அந்த அதிசய ஆன்மிக உண்மையை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். வீட்டில் பூஜை செய்வது என்பது வெறும் சடங்கு அல்ல. அது ஒரு புனிதமான ஆன்மீக செயல். தீர்த்தம் பிரசாதம் விளக்கு தூபம் போன்றவற்றை சரியான முறையில் பயன்படுத்தி மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் எதிர்மறை ஆற்றல்களை நீக்கி நேர்மறை சக்திகளை ஈர்க்க முடியும்.
ஆன்மிக ஒழுக்கம்
வீட்டில் பூஜை செய்வது என்பது சுவாமி முன் நின்று விளக்கேற்றி முடிப்பது அல்ல. அது மனம் சொல் செயல் மூன்றும் ஒன்றாக இணையும் ஒரு புனிதமான ஆன்மீக செயல். பூஜை செய்யும் நேரத்தில் மனம் அமைதியாக இல்லாவிட்டால் பூஜையின் முழு பலன் கிடைப்பது இல்லை. ஆகையால் பூஜைக்கு முன்பு சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்துவது மிகவும் முக்கியமான ஆன்மீக ஒழுக்கமாகும்.
நேர்மறை ஆற்றல்
பிரபஞ்சத்தில் நல்ல சக்தியும் எதிர்மறை சக்தியும் இயங்குகின்றன. மனித வாழ்க்கையில் ஏற்படும் பல தடைகள் குழப்பங்கள் மன அழுத்தங்கள் எதிர்மறை ஆற்றல்களின் தாக்கமாகவே கருதப்படுகிறது. அந்த எதிர்மறை ஆற்றல்களை அகற்றி நேர்மறை சக்திகளை வீட்டுக்குள் அழைக்கும் சக்தி பூஜைக்கு உண்டு. அதற்காகவே தினசரி இறைவழிபாடு என்பது முக்கியமாக வலியுறுத்தப்படுகிறது.
உள்ளம் தெளிவடைதல்
வீட்டில் பூஜை செய்யும் போது தீர்த்தம் கட்டாயம் வைக்க வேண்டும். நீர் என்பது உயிரின் ஆதாரம் மட்டும் அல்ல. அது தெய்வீக ஆற்றலை தாங்கும் சக்தி கொண்டது. இறைவனே… இந்த தீர்த்தத்தில் எழுந்தருள்வாயாக என மனதார வேண்டி தீர்த்தம் வைக்கும் போது அது சாதாரண நீர் அல்ல. தெய்வீக அதிர்வுகளை உடையதாக மாறுகிறது. அந்த தீர்த்தத்தை அருந்துவதால் மனதில் உள்ள அசுத்த எண்ணங்கள் நீங்கி உள்ளம் தெளிவடைகிறது.
பிரசாதம்
அதைப்போல் பிரசாதம் வைப்பதும் மிக அவசியம். பிரசாதம் என்பது நாம் இறைவனிடம் செலுத்தும் நன்றி மற்றும் பக்தியின் வெளிப்பாடு. வெறும் சாதாரண உணவு கூட இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படும் போது அது புனிதமானதாக மாறுகிறது. கற்கண்டு சர்க்கரை பால் பழங்கள் போன்ற எளிய பொருட்களே போதுமானவை. குறிப்பாக வெற்றிலை பாக்கு வைத்து வழிபடுவது இறைவனுக்கு மிகவும் உகந்ததாகவும் குடும்ப நலனை அதிகரிக்கும் வழிபாடாகவும் கருதப்படுகிறது.
விளக்கேற்றுதல்
பூஜையில் விளக்கு ஏற்றுதல் மிகவும் முக்கியமான ஆன்மீக அம்சமாகும். விளக்கின் ஒளியில் அறியாமை என்னும் இருளை அகற்றி ஞானத்தை அளிக்கும் அடையாளமாக பார்க்கப்படுகிறது. அகல் விளக்கு அல்லது நெய் விளக்கு ஏற்றுவது வீட்டில் உள்ள தோஷங்களை குறைத்து நல்ல சக்தி நிரந்தரமாக நிலைத்திருக்க உதவுகிறது. தினமும் காலை அல்லது மாலை குறைந்தது ஒரு விளக்கு ஏற்றுவது மிகச் சிறந்த ஆன்மீக வழக்கமாகும். தூபம் சாம்பிராணி போன்றவை எரிப்பதும் ஆன்மீக ரீதியாக முக்கியமானது. அவற்றின் மணம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை அகற்றி சுத்தமான தெய்வீக அதிர்வுகளை உருவாக்குகிறது.
மன அமைதி
குறிப்பாக பூஜை நேரத்தில் தூபம் காட்டுவது மன அமைதியை அதிகரிக்கும். பூஜை நேரத்தில் நாமஸ்கரணம் செய்வது அல்லது குறைந்தது ஒரு மந்திர ஸ்லோகம் அல்லது இறைவனின் நாமத்தை உச்சரிப்பது மிகவும் வலிமையான ஆன்மீக பயிற்சி. அதிக மந்திரங்கள் தெரியாவிட்டாலும் ஓம் நமச்சிவாயா, ஓம் நமோ நாராயணா, ஓம் சக்தி போன்ற எளிய நாமங்கள் போதுமானவை. மனமும் சொல்லும் ஒன்றாக இணையும் போது அதன் பலன் பல மடங்கு அதிகரிக்கும்.
ஞானம் பெறுதல்
பூஜை முடிந்த பின்பு சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துவது அவசியம். இந்த நன்றி உணர்வே வாழ்க்கையில் நிறைவு மற்றும் மன அமைதியை தரும் முக்கிய ஆன்மீக ரகசியமாகும். தினசரி இவ்வாறு பூஜை செய்தால் மனோபலம் அதிகரித்து குடும்பத்தில் ஒற்றுமை பெருகி ஆரோக்கியமும் செழிப்பும் நிலைக்கும். இதனால் வீட்டில் பூஜை செய்வதை ஒரு பழக்கமாக மட்டுமல்லாமல், வாழ்க்கையை ஒழுங்குபடுத்தும் ஆன்மீக சாதனையாகவும் மாற்றிக் கொண்டால் அதன் நல்ல விளைவுகள் நிச்சயமாக வாழ்க்கை அனுபவத்தில் தெரியும். வீடும் சுபிட்ஷம் நிறைந்ததாக மாறும்.
