சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

By Gayathri on ஆவணி 17, 2026

Spread the love

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. நேற்றிரவு நடைபெற்ற இந்த விழாவில், மதுபோதையில் இருந்த சிலர் சினிமா பாடல்கள் ஒலிபரப்புவது தொடர்பாக முதலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் அப்புறப்படுத்திய சற்று நேரத்தில், அங்கு நின்றுகொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் மற்றும் நீலகண்டன் ஆகிய இரண்டு இளைஞர்களை மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று ஈவிரக்கமின்றி வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடியது.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தைத் தொடர்ந்து, கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் காஞ்சிபுரம் – அரக்கோணம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் அவர்களை சமாதானப்படுத்திய போலீசார், இருவரின் உடல்களையும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கொலையாளிகளைப் பிடிக்க காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதுடன், இக்கொலைக்கான காரணம் முன்விரோதமா அல்லது திருவிழாவில் ஏற்பட்ட தகராறா என்ற கோணத்திலும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.