தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக முற்றிலும் இலவசமாகப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அனுபவம் மிக்க பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படும் இப்பயிற்சிகளில், மாணவர்களுக்குத் தேவையான பாடக்குறிப்புகள், தினசரி மற்றும் மாத இதழ்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் ஆகியவற்றுடன் பாடவாரியான மாதிரித் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன. மேலும், உளவியல் பகுப்பாய்வு சோதனைகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான தொழில்நெறி ஆலோசனைகள் மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலான பயிற்சிகளும் இங்கு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது ஜூன் 1-ஆம் தேதி முதல் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகள் நேரடியாவும் இணையவழியாகவும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் TNPSC தேர்வுகளுக்கான நேரடி வகுப்புகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கின்றன. அதேபோல, RRB மற்றும் SSC தேர்வுகளுக்கான நேரடி வகுப்புகள் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், நேரடி வகுப்பில் பங்கேற்க முடியாதவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் அதே நாட்களில் மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடத்தப்படுகின்றன.
இந்த இலவசப் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயனடைய விரும்பும் மாணவர்கள், தங்களது அடையாள அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சென்னை, கிண்டியில் உள்ள மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொள்ள வேண்டும். “மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், A-28, முதல் தளம், டான்சி கட்டிடம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை – 600032” என்ற முகவரியிலோ அல்லது 044-22500134, 9361566648 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ தொடர்பு கொண்டு மாணவர்கள் தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளவும், கூடுதல் விவரங்களைப் பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
