“சிங்கப்பெண் படை தொடங்கிய உடனே இப்படியா?… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி… அடுத்த சில நிமிடங்களில் போலீஸ் எடுத்த விஸ்வரூபம்…!!”

By Swetha on ஆனி 13, 2026

Spread the love

தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் “சிங்கப்பெண் அதிரடிப்படை” என்ற புதிய திட்டத்தை தமிழக முதலமைச்சர் கடந்த 9-ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 70 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 12 குழுக்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மகளிர் காவல் நிலைய போலீசாருடன் இணைந்து இந்த அதிரடிப்படையினர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.

இத்திட்டம் தொடங்கப்பட்ட சில நாட்களேயான நிலையில், சென்னை அயனாவரம் பகுதியில் இதன் முதல் வழக்கு பதிவாகியுள்ளது. அங்குள்ள ஒரு பகுதியில் தனியாக இருந்த 37 வயது பெண்ணிடம், சுரேஷ் (36) என்ற நபர் மதிய வேளையில் மதுபோதையில் அத்துமீறி அநாகரிகமாக நடந்துகொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் சத்தமிட்டதை அடுத்து, அங்கு திரண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டதோடு உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

   

தகவலறிந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் பெண் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அத்துமீறலில் ஈடுபட்ட சுரேஷை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததை அடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து சுரேஷைக் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்படி அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிங்கப்பெண் அதிரடிப்படை களமிறங்கிய உடனே, புகாரின் பேரில் விரைந்து செயல்பட்டு குற்றவாளியைக் கைது செய்திருப்பது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.