தமிழக மக்கள் பயனடையும் விதமாக ஏராளமான திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் கலைஞர் உரிமைத்தொகை திட்டம். இந்த திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என கடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜூலை 15-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் மட்டுமே மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்கத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் விண்ணப்பிக்க குடும்பத் தலைவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்திற்கான போலி விண்ணப்பங்களை சிலர் விநியோகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே மக்கள் போலி விண்ணப்பங்களை பணம் கொடுத்து வாங்கி ஏமாற வேண்டாம் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சந்தேகங்கள் ஏதேனும் இருந்தால் அரசு அலுவலகங்களில் கேட்டு பயன்பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
