காவிரி நதியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சி மற்றும் உரிய தண்ணீர் திறந்து விடாத சூழல் ஆகியவற்றுக்குத் தீர்வு காணும் வகையில், கர்நாடக முதல்வர் சிவக்குமாரை நேரில் சந்திக்கத் தமிழக முதல்வர் விஜய் திட்டமிட்டிருந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவக்குமாரின் அழைப்பை ஏற்று, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி பெங்களூரு செல்ல முதல்வர் திட்டமிட்டிருந்தார். 1980-களில் நிலவிய கடுமையான வறட்சியின்போது அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்., கர்நாடக முதல்வருடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி தமிழகத்திற்குத் தேவையான தண்ணீரைப் பெற்ற வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் வகையில், இந்த அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சி பார்க்கப்பட்டது.
இருப்பினும், இந்த நேரடிச் சந்திப்பு முயற்சிக்குத் தமிழக அரசியல் களம் மற்றும் விவசாய அமைப்புகளிடம் இருந்து ஆரம்பத்திலிருந்தே பலத்த எதிர்ப்புகள் கிளம்பின. மாநில முதல்வரைச் சந்திப்பதால் காவிரிப் பிரச்சினையில் எந்தவொரு நிரந்தர தீர்வும் கிடைக்கப் போவதில்லை என்றும், அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதிப்பதே இப்போதைய அவசியத் தேவை என்றும் தலைவர்கள் வலியுறுத்தினர். குறிப்பாக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் இப் பயணத்தைத் தவிர்க்குமாறு சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு அப்பால், எல்லைப் பகுதியிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. கர்நாடகாவிலும் இந்த சந்திப்புக்கு எதிர்ப்புகள் உருவெடுத்துள்ள நிலையில், மாண்டியாவில் விஜய் நடித்த “ஜனநாயகன்” திரைப்படத்தின் போஸ்டர்களைக் கன்னட அமைப்பினர் கிழித்தெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஒருவேளை முதல்வர் உறுதியாகப் பெங்களூரு செல்லும் பட்சத்தில், அங்குள்ள சில அமைப்புகள் கருப்புக்கொடி காட்டத் திட்டமிட்டிருப்பதாகக் கிடைத்த உளவுத்துறை ரகசியத் தகவலும், முதல்வரின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைகள் மற்றும் உளவுத்துறையின் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி ஆகஸ்ட் 3-ஆம் தேதி பெங்களூரு செல்லும் பயணத்தை முதல்வர் விஜய் ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஒருமித்த தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி வைப்பதே சட்டரீதியாகப் பலம் சேர்க்கும் எனப் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். நாலாபக்கமிருந்தும் அழுத்தங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பயணத்தை ஒத்திவைப்பது குறித்த இறுதி முடிவை முதல்வர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
