ஓட்டு போட போறீங்களா?.. லிஸ்டுல பெயர் இருந்தா மட்டும் போதாது.. கையில் இந்த ‘ஒரிஜினல்’ இருக்கணும்…. தேர்தல் ஆணையத்தின் அதிரடி அறிவிப்பு…!

By Nanthini on சித்திரை 23, 2026

Spread the love

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 39 நாட்களாக அரசியல் கட்சிகள் மேற்கொண்ட அனல் பறக்கும் பிரச்சாரங்கள் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், இன்று மாலை 6 மணி வரை பொதுமக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற உள்ளனர். வாக்குச் சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வரும் சூழலில், பாதுகாப்புப் பணிகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) கையில் இல்லாதவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர்கள் தங்களின் அடையாளத்தை நிரூபிக்க ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, இந்திய கடவுச்சீட்டு (Passport) மற்றும் புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்குப் புத்தகங்கள் உள்ளிட்ட 12 விதமான மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அசல் வடிவில் காண்பித்து வாக்களிக்கலாம். இந்த நெகிழ்வுத்தன்மை வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

   

அடையாள ஆவணங்கள் தவிர, அரசு ஊழியர்களுக்கான சேவை அடையாள அட்டைகள், ஓய்வூதிய ஆவணங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணி அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவமான அடையாள அட்டை (UDID) போன்றவையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், எந்த ஆவணத்தை வைத்திருந்தாலும் சம்பந்தப்பட்ட வாக்காளரின் பெயர் அந்தத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பது மிக அவசியமாகும். பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே இந்த மாற்று ஆவணங்கள் செல்லுபடியாகும்.

   

வாக்குப்பதிவு சுமூகமாக நடப்பதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. குறிப்பாக, பர்தா அல்லது முக்காடு அணியும் பெண்களின் அடையாளத்தைச் சரிபார்க்க பெண் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக வாக்குச் சாவடிகளில் தனிப்பட்ட இட வசதி மற்றும் கண்ணியமான முறையில் சரிபார்ப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்துத் தரப்பு மக்களும் எவ்விதத் தயக்கமும் இன்றி தங்களின் வாக்குகளைப் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.