இந்தி சினிமா பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களை தமிழ் பாடல்கள் பக்கம் திருப்பியவர் இளையராஜா என்றால், இந்தி ரசிகர்களையும் தமிழ் சினிமா பாடல்களைக் கேட்க வைத்தவர் ஏ ஆர் ரஹ்மான் என்று சொல்வார்கள்.
தான் அறிமுகமான ரோஜா திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் ஹிட்டடித்தன. அதன் பின்னர் ரஹ்மான் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோரோடு இணைந்து பணியாற்றிய படங்களின் பாடல்கள் எல்லாம் இந்தியா முழுவதும் வைரல் ஹிட்டாகின. பாடல்களுக்காகவே சில பாடல்கள் ஹிட்டாகின என்பதும் குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோர்தான் அந்த காலத்தில் ரஹ்மானின் பாடல்களை மிகச்சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்றால் அது மிகையாது. அதன் பின்னர் இந்தி சினிமா, ஹாலிவுட் மற்றும் உலக சினிமா என அடுத்தடுத்து அவரின் வளர்ச்சி உயர்ந்து கொண்டே சென்றது.
இளையராஜா தன்னுடைய இசையால் தமிழ் சினிமாவை ஆண்டுகொண்டிருந்த போது ரஹ்மான் தன்னுடைய இருபதுகளில் அறிமுகமானார். ஆனால் முதல் படத்திலேயே தான் யாரென்பதை நிரூபித்து தேசிய விருது வரை சென்றார். முதல் படத்திலேயே அவர் இசை இந்தியா முழுவதும் அவரைக் கவனிக்க வைக்கும் இசையமைப்பாளர் ஆக்கியது.
இளையராஜாவுக்கும் ரஹ்மானுக்குமான வேறுபாடாக சொல்லப்படுவது ரஹ்மான் பாடகர்களுக்கு அளித்த சுதந்திரம்தான் என சொல்லப்பட்டது. இளையராஜா தான் சொல்லிக் கொடுத்ததை அப்படியே பாடவேண்டும் என சொல்வார். ஆனால் ரஹ்மான் அந்த ட்யூனுக்குள் உங்கள் கற்பனையை எவ்வளவு வேண்டுமானாலும் இறக்கிக் கொள்ளுங்கள் என்பாராம்.
இதை மூத்தப் பாடகரான டி எல் மகாராஜன் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் ‘நான் ரஹ்மானிடம் ‘நீ கட்டும் சேல மடிப்புல’ பாடலை பாட போன போது ட்யூனை மட்டும் சொல்லிவிட்டு அதை மீறாமல் உங்கள் சரக்கையும் சேர்த்துக் காட்டுங்கள்’ என்றார். அந்த வகையில் ரஹ்மான் எல்லா பாடகர்களுக்கும் மிகப்பெரிய சுதந்திரத்தைக் கொடுப்பார்’ எனக் கூறியுள்ளார்.