உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், இந்திய இளைஞர்களைக் கரப்பான் பூச்சிகள் என்று தாம் விமர்சித்ததாக வெளியான செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என மறுத்து விளக்கம் அளித்துள்ளார். வழக்கறிஞர் ஒருவர் மூத்த வழக்கறிஞர் (Senior Advocate) அந்தஸ்து கோரி தொடர்ந்த மனுவை விசாரித்த போது நீதிபதி கூறிய கருத்துக்கள் தவறாகச் சித்தரிக்கப்பட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். நாட்டின் இளைஞர்கள் மீது தாம் அளவற்ற மதிப்பு வைத்துள்ளதாகவும், அவர்களை வளர்ந்த இந்தியாவின் மிக முக்கியத் தூண்களாகவே கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் போலிப் பட்டங்களைப் பயன்படுத்தி வழக்கறிஞர் போன்ற உன்னதமான தொழில்களுக்குள் நுழைபவர்களை மட்டுமே குறிப்பாக விமரிசித்ததாகத் தலைமை நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார். இத்தகைய நபர்கள் சட்ட விரோதமாக நுழைவதோடு மட்டுமின்றி ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் இதர மதிப்புமிக்க துறைகளுக்குள்ளும் ஊடுருவி ஒட்டுமொத்த சமூக அமைப்பையும் சுரண்டுவதாகச் சாடியுள்ளார். நீதிமன்ற அமைப்புக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் செயல்படும் இத்தகைய போலி நபர்களைக் குறிவைத்தே தாம் “ஒட்டுண்ணிகள்” மற்றும் “கரப்பான் பூச்சிகள்” போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக அவர் விவரித்துள்ளார்.
குறிப்பிட்ட அந்த வழக்கறிஞர் தனக்கு மூத்த வழக்கறிஞர் அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பதிவிடுவதும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் நீதிமன்ற அமைப்புக்கு அழுத்தம் தருவதுமாக இருந்த பின்னணியிலேயே நீதிபதியின் இத்தகைய கடுமையான கருத்துக்கள் நீதிமன்றத்தில் வெளியாயின என்பது குறிப்பிடத்தக்கது.
