நடுவழியில் உயிருக்கு துடித்த இளம்பெண்… டிரைவர், கண்டக்டர் செய்த ‘அந்த’ ஒரு காரியம்… புதுச்சேரியையே உருகவைத்த நெகிழ்ச்சி சம்பவம்… குவியம் பாராட்டுக்கள்…!

By Visaka on ஆடி 4, 2026

Spread the love

புதுச்சேரியில் ஓடும் அரசுப் பேருந்தில் திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய இளம்பெண்ணை, சமயோசிதமாகச் செயல்பட்டு அரசுப் பேருந்தையே ஆம்புலன்ஸாக மாற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உயிர் காத்த ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் மனிதநேயச் செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா (30) என்ற இளம்பெண் தனது பெற்றோருடன் புதுச்சேரி நோக்கி அரசுப் பேருந்தில் பயணித்தபோது, டோல்கேட் அருகே அவருக்குக் கடுமையான வலிப்பு ஏற்பட்டுள்ளது. பேருந்துக்குள் பதற்றமான சூழல் நிலவிய நிலையில், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த நடத்துநர், ஆம்புலன்ஸ் வரக் காத்திருந்தால் காலதாமதமாகிவிடும் என்பதை உணர்ந்து, ஓட்டுநரிடம் நிலைமையை விளக்கியுள்ளார். சிறிதும் தாமதிக்காத ஓட்டுநரும், சக பயணிகளின் முழு ஒத்துழைப்போடு பேருந்தை அதிவேகமாக இயக்கி, நேரடியாகப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் அவசரச் சிகிச்சை பிரிவு நுழைவு வாயிலுக்கே கொண்டு சென்று நிறுத்தினார்.

மருத்துவமனை வாசலில் பேருந்து நின்றதும், நடத்துநர் மற்றும் பயணிகளின் உதவியோடு ஐஸ்வர்யா உடனடியாக மீட்கப்பட்டு அவசரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதால், அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். நெருக்கடியான நேரத்தில் மாற்றுச் சிந்தனையின்றி, சாதுரியமாகச் செயல்பட்டு ஓர் இளம்பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய அரசுப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் இந்த உன்னதமான சேவையைப் பேருந்தில் பயணித்த பொதுமக்கள் மற்றும் சமூக வலைத்தளவாசிகள் தங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துகளுடன் பாராட்டி வருகின்றனர்.